Tamilnadu

ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய கணவர் - மனைவி திட்டியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். மனைவி வினோதினி. இந்த தம்பதிகள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நூல் மில் ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், சக்திவேல் தனது செல்போனில் அடிக்கடி ஆன்லைன் ஃப்ரீபையர் கேம்மை விளையாடி வந்துள்ளார். இதை மனைவி வினோதினி கண்டித்து வந்துள்ளார்.

இப்படி, நேற்று வேலைக்குச் செல்லாமல் சக்திவேல் ஃப்ரீபையர் விளையாடியுள்ளார். இதைப் பார்த்த மனைவி வேலைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் சக்திவேல் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனால் கணவனைக் கண்டித்துவிட்டு வினோதினி குளிக்கச் சென்றுள்ளார்.

பின்னர், வந்து பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார். இவரின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து, சக்திவேலின் சடலத்தை கீழே இறக்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார், மனைவி மற்றும் சக்திவேலுடன் ஃப்ரீபையர் விளையாடி வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து சிறுவன் பலி : ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!