Tamilnadu

லஞ்சம் கேட்ட வழக்கில் சிக்கிய அ.தி.மு.க நிர்வாகி : முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் இருந்தது அம்பலம்!

சென்னை சேலையூர் நாகம்மை நகரைச் சேர்ந்தவர் வெங்கடசாமி. இவர் தனது தந்தை பெயரில் உள்ள சொத்தை தனது மனைவி ஆதிலட்சுமி பெயரில் மாற்றுவதற்காக, சேலையூர் சார்பதிவாளராக உள்ள ஜார்ஜ் என்பவரை அனுகினார்.

அப்போது அவர் இதுதொடர்பாக என்னிடம் பேசவேண்டாம். கார்த்திக் என்பவரின் செல் நம்பரைக் கொடுத்து பேசும் படி கூறியுள்ளார். இதனால் வெங்கடசாமியின் மகன் வினோத்குமார், கார்த்திக்கிடம், சொத்தை அம்மா பெயரில் மாற்றிக் கொடுக்க வேண்டும். இதற்கான பட்டா, ஆவணங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.

இதை முடித்துக் கொடுக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதில் 90 ஆயிரம், சார்பதிவாளர் ஜார்ஜூக்கும், ₹10 ஆயிரம் தனக்கும் கமிஷனாகவும் வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, பணத்தைக் கொடுப்பதற்காக கடந்த 5ம் தேதி வினோத் குமார் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கனவே கிடைத்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சாதாரண உடையில் சேலையூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். இதனிடையே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த ஜார்ஜ், அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில், வினோத்குமார், ஜார்ஜ் இல்லாததால், கார்த்திக்கிடம் பணத்தை கொடுத்தார். அவர் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலிஸார் கார்த்திக்கை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, ஜார்ஜூக்காகத்தான் தான் பணம் வாங்கியதாக கூறினார். இதனால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜார்ஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில், அவர் பல கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது. அவர் கட்டியுள்ள வீடு மட்டுமே பல கோடியாகும். இதைப் பார்த்து லஞ்ச ஒழிப்பு போலிஸாரே அசந்து விட்டனர். இதனால் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக தனியாக மற்றொரு வழக்குப்பதிவு செய்வது குறித்து லஞ்ச ஒழிப்பு போலிஸார் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஜார்ஜ் அ.தி.மு.கவில் ஆயிரம் விளக்கு வட்டச் செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. வழக்கமாக அரசு ஊழியர் ஒருவர் கட்சியில் பொறுப்பில் இருக்கக் கூடாது. ஆனால் அவர் விதிமுறையை மீறி கட்சிப் பொறுப்பில் பணியாற்றி வந்துள்ளார். அதுமட்டுமல்லாது, முன்னதாக மாதவரத்தில் பணியாற்றியபோது 5 ஏக்கர் நிலத்தை போலியாக பதிவு செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அப்போது, தென் சென்னை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான தி.நகர் சத்தியா தலையீட்டின்பேரில், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.கவில் இருந்ததால் அவர் மீது போலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவர் பணிமாற்றம் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. அமைச்சர் மூர்த்தியும் தவறு செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பழனிசாமிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்தமாட்டார்கள்”: அ.தி.மு.க கும்பலுக்கு பாடம் புகட்டிய ‘முரசொலி’!