Tamilnadu

"கொலை மிரட்டல் விடுக்கிறார்..." : ஜி.பி.முத்து மீது பிரபல நடிகர் பரபரப்பு புகார்!

கொலை மிரட்டல் விடுத்து வரும் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து மீது நடவடிக்கை நடக்க வேண்டும் என 'காதல்' பட நடிகர் போலிஸில் புகார் அளித்துள்ளார்.

'காதல்' படம் மூலம் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர் நடிகர் சுகுமார். இவர் தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகனாகவும் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுகுமார் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், "கொரோனாவால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாததால் செல்போன்கள் மூலம் கல்வி கற்று வருகிறார்கள்.இப்படி கற்கும்போது சமூகவலைத்தளங்களில் இலக்கியா, ஜி.பி.முத்து போன்றவர்கள் ஆபாசமாக வீடியோ வெளிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் மீது டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். இது பற்றி ஊடகங்களிலும் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் இணையம் வழியாக எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

எனவே, ஜி.பி.முத்து உள்ளிட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களது சமூகவலைத்தளங்களை முடக்க வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

டிக்டாக் சூர்யா, ஜி.பி.முத்து, இலக்கியா போன்றவர்கள் மீது ஏற்கனவே பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது நடிகரும் புகார் கொடுத்துள்ளதால் இவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், யூ-டியூபில் ஆபாசமாக பேசி வந்த பப்ஜி மதனை போலிஸார் கைது செய்து, அவரின் சமூகவலைதளப் பக்கத்தை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

Also Read: “நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே!” : ATM இயந்திரத்திலேயே வசமாக மாட்டிக்கொண்ட வடமாநில திருடன்!