Tamilnadu

“அ.தி.மு.க தொண்டர்களுக்கு எனது அனுதாபங்கள்” : மதுசூதனன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அ.தி.மு.க அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த இரு தினங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், இன்று மாலை மதுசூதனன் (81) காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அ.தி.மு.க அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.கவில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அவர்களால் கட்சியில் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர். அ.தி.மு.கவின் அவைத் தலைவராகப் பணியாற்றிய அவர், அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பட்டிதொட்டிகள் வரை பாடுபட்டவர். அப்படிப்பட்ட முன்னோடித் தலைவரை அ.தி.மு.க இழந்திருப்பது பேரிழப்பாகும்.

ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கைத்தறித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சாதாரணத் தொண்டர் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாகப் பழகியவர்.

ஏழை - எளியவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அ.தி.மு.கவிற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்த மதுசூதனன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Also Read: கோவில் திண்டில் அமர்ந்தபடி திட்டம் தொடக்கம்... இத்தனை எளிமையாக ஓர் அரசு விழாவா? : பொதுமக்கள் வியப்பு!