Tamilnadu

சிறுமியின் உயிரை குடித்த ரூ.10 குளிர்பானம்.. ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள் - அதிர்ந்துபோன சென்னை மக்கள்!

சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த சதீஷ் -காயத்ரி தம்பதியின் இளைய மகள் தரணி. (13 ), செவ்வாய் மாலை சிறுமி தரணி வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் டோகிடோ கோலா என்ற குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார்.

குளிர்பானம் குடித்த சில மணித்துளிகளில் சிறுமி வாந்தி எடுக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. மூக்கில் இருந்து இரத்தம் கலந்த சளி வந்ததையடுத்து சிறுமி மயக்கமாகியுள்ளார். உடல் முழுவதும் நீல நிறமாக மாறியதால் உறவினர்கள் சிறுமியை அருகிலுள்ள மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது ஏற்கனவே சிறுமி தரணி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமி குடுத்துவிட்டு மீதம் வைத்த குளிர்பானத்தை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆத்தூரில் உள்ள சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனத்திற்கு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புதுறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். சிறுமி குடித்த குளிர்பானம் தயாரிக்கப்பட்ட நாளில் வினியோகம் செய்யப்பட்ட பேட்ச் எண் அடங்கிய குளிர்பானங்கள் குறித்து விசாரணை செய்தார்.

மேலும் குளிர்பானம் தயாரிக்கும் முறைகள் குறித்து அப்போது தொழிற்சாலை நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். குளிர் பானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் தன்மைகள் குறித்து விரிவாக கேட்டறிந்த அவர் குளிர்பான பாட்டில்களில் அதன் தயாரிப்பு மற்றும் அதன் காலாவதி தேதி ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட உணவுப் பாதுகாப்புதுறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், “சிறுமி குடித்த குளிர்பானத்தின் மாதிரி ஆய்வு முடிவுகள் வரும் வரை குளிர்பான ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. குளிர்பான மாதிரி ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனதெரிவித்தார்.

மேலும் சிறுமி குடித்த குளிர்பானம் தயாரித்த பேட்ஜ் எண் கொண்ட பெட்டிகள் அனைத்தையும் கடைகளில் இருந்து உடனடியாக திரும்ப பெறுமாறு தொழிற்சாலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மேலும் உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் அறிவுரையின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Also Read: “பொதுத்துறையை தொடர்ந்து சூறையாடும் மோடி அரசின் அடுத்த ‘பலி’?”: தனியார்மயமாகும் ராணுவ தளவாட உற்பத்தி துறை!