Tamilnadu

"மோசடியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த பா.ஜ.க” - ஈமு கோழி மோசடியில் சிறைக்குச் செல்லும் பாஜக பிரமுகர்!

ஈமு கோழி மோசடியில் சிக்கி சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள தமிழ்நேசன் பா.ஜ.க நிர்வாகி ஆவார்.

ரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஈமு கோழி நிறுவனம் நடத்தி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் யுவராஜ் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 2.47 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சுகி ஈமு கோழி நிறுவனத்தை தீரன் சின்னமலை பேரவையின் மாநிலத்தலைவர் யுவராஜ், வாசு மற்றும் பா.ஜ.க நிர்வாகி தமிழ்நேசன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 121 பேரிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பழனிச்சாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள முதலீட்டார் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று பேருக்கும் சேர்த்து 2.47 கோடி அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பு வழங்கினார்.

இதில் தமிழ்நேசன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஈமு கோழி மோசடியில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள தமிழ்நேசன், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வடமழை மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது நாகை தெற்கு மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரூ.600 கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது... பண்ணை வீட்டில் மடக்கிப்பிடித்த குற்றப்பிரிவு போலிஸ்!