Tamilnadu

சிறுமியின் உயிரைக் குடித்த குளிர்பானம்..? - போலிஸ் தீவிர விசாரணை!

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகளான தரணி நேற்று வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார்.

பின்னர், குளிர்பானம் குடித்த சில நிமிடத்திலேயே சிறுமி தரணி வாந்தி எடுத்துள்ளார். மேலும் அவரது மூக்கிலிருந்து சிவப்பு நிறத்தில் சளி வந்துள்ளது. அப்போது உடனிருந்த அவரது சகோதரி பயந்துபோய் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

பிறகு, பதறியடித்து வந்த பெற்றோர் தரணியை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதைக்கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுமி குளிர்பானம் வாங்கிய கடையிலிருந்த குளிர்பானங்களைப் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஆய்வகத்திலிருந்து முடிவு வந்த பிறகுதான் சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தைச் சூறையாடிய மர்ம நபர்... யார் இவர்? காரணம் என்ன? - குழம்பும் நிர்வாகம்!