Tamilnadu

”சட்டமன்ற நூற்றாண்டு விழா; வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கோட்டை” : 5 அடுக்கு போலிஸ் பாதுகாப்பு குவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்தினை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்காக தலைமைச்செயலகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

நாளை நடைபெற உள்ள சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கு இன்று காலை முதலே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தலைமைச் செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிவிரைவுப்படையினர், போக்குவரத்து காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 5 துணை ஆணையர்கள் தலைமையில்  500க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமைச் செயலகத்திற்குள் வரும் வாகனங்கள் மிகுந்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

மேலும் தகுந்த அடையாள அட்டை கொண்டவர்கள் மட்டுமே தலைமைச் செயலகத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வப்போது மோப்பநாய் நாய் கொண்டு கோட்டை முழுவதும் சோதனையிடப்பட்டு வருகின்றன. நாளை வரவுள்ள ஜனாதிபதியை வரவேற்கும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்தில் காவலர்கள் வாகன பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர்.