Tamilnadu

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளின் காதலனை வெட்டிய சம்பவம் - பெற்றோர் கைது!

திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தீபா.இந்த தம்பதிக்கு கௌசல்யா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகம்மது பெமினாஸ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு கௌசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி தொடர்ந்தும் இவருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கௌசல்யாவின் பெற்றோர் முகம்மது பெமினாஸ் வீட்டிற்கு சென்று, “எனது மகளை காதலிக்க வேண்டாம்”' என கூறியுள்ளனர். அப்போது அவர் “நான் காதலிக்கும் பெண்ணைதான் திருமணம் செய்து கொள்வேன்” என கூறியுள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த விஜயகுமார் மற்றும் தீபா தாங்கள் எடுத்து வந்திருந்த அரிவாளால்,முகம்மது பெமினாஸை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பெமினாஸின் பெற்றோர் அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு பெமினாஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பெமினாஸ் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விஜயகுமார் மற்றும் தீபா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: மனைவியை பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு மற்றொரு திருமணம்... கரூரில் ஒரு ‘கல்யாண’ராமன்!