Tamilnadu

போலிஸில் பிடித்துக் கொடுத்ததால் ஆத்திரம்; பழிதீர்க்க வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய சிறுவர்கள்!

புதுவை கொம்பாக்கும் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். கூலித் தொழிலாளியான இவரது வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சக்திவேல் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது ஒரே புகை மூட்டமாக இருந்துள்ளது. பின்னர் வீட்டு வாசல் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றது தெரிந்தது.

பின்னர் சக்திவேல் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் மூன்று சிறுவர்கள் சக்திவேல் வீட்டு மீது நாட்டு வெடிகுண்டு வீசியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களையும் பிடித்து போலிஸார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இந்த மூன்று சிறுவர்களும் மளிகை கடை ஒன்றில் திருட முயன்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் அவர்களைப் பிடிக்கும் போது ஒரு சிறுவன் மட்டும் இவர்களுடன் பிடிபட்டுக்கொண்டார்.

அப்போது சக்திவேல் அந்த சிறுவனிடம் எந்த ஊர், எங்கெங்கு திருடின என விசாரித்து அதனை வீடியோ எடுத்துள்ளார். மேலும் சிறுவனை முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

பின்னர் போலிஸார் சிறுவன் என்பதால் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தான் அந்த மூன்று சிறுவர்களும் சேர்ந்து போலிஸில் பிடித்துக் கொடுத்து அசிங்கப்படுத்திய சக்திவேலைப் பழிவாங்க வேண்டும் என திட்டம் போட்டுள்ளனர்.

இவர்களின் திட்டத்தின் படி இரவு நேரத்தில் சக்திவேல் வீட்டின் மீது நாட்டு வெடிக்குண்டுகளை வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று சிறுவர்களையும் போலிஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுவர்களுக்கு எங்கிருந்து நாட்டு வெடிகுண்டு கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Also Read: முட்டையில் முதலீடு; 4.5 லட்சத்தை சுருட்ட எத்தனித்த பலே நிறுவனம்; சென்னையில் கையும் களவுமாக பிடித்த போலிஸ்