Tamilnadu

பெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி!

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக 4 வயது மகனை கொன்ற தாய் உட்பட 2 பேரை போலிஸார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் மேலவாஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த் (31). இவரது மனைவி அபர்ணா (22). இவர்களது மகன் கவித்திரன் (4).

கருத்து வேறுபாடு காரணமாக சிறிது காலம் பிரிந்து வாழ்ந்த கார்த்திக் அரவிந்த், அபர்ணா தம்பதியை உறவினர்கள் சமாதானம் செய்து சேர்த்து வைத்தனர். இதையடுத்து இருவரும் நாகை தாமரைக்குளம் தென்கரையில் வசித்து வந்தனர்.

கார்த்திக் அரவிந்த் சென்னையில் வேலைபார்த்து வந்த நிலையில், தாமரைக்குளம் மேல்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சுரேஷ் (24) என்பவருடன் அபர்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நாகை காடம்பாடி சூர்யா நகரில் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக தனது மகன் கவித்திரனை கடந்த 26-ஆம் தேதி இரவு அபர்ணா தனது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும், இதற்கு சுரேஷ் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் சென்னையில் உள்ள கார்த்திக் அரவிந்த்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த தகவலின்பேரில் வெளிப்பாளையம் போலிஸார் நேற்று முன்தினம் கவித்திரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அபர்ணா, சுரேஷ் ஆகியோரை நேற்று போலிஸார் கைது செய்தனர். பெற்ற தாயே மகனைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "ஊழலுக்கு நாங்கள் நண்பர்கள்” : ராகேஷ் அஸ்தானா நியமனம் மூலம் மீண்டும் வெளுத்த மோடி-அமித்ஷா சாயம்!