Tamilnadu

மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்!

நீண்ட நேரம் கதவைத் தட்டியும் மனைவி திறக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக கருதிய காவலர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வசித்து வருபவர் ரத்தினகிரி. இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு நாகஜோதி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். நாகஜோதி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவரும் தனித்தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் எழுந்த ரத்தினகிரி, தன் மனைவி நாகஜோதி தூங்கிக்கொண்டிருந்த அறையை பலமாகத் தட்டி உள்ளார்.

நாகஜோதியின் கதவைத் திறக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதி மனமுடைந்த ரத்தினகிரி தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீண்ட நேரம் அறைக் கதவை தட்டிக்கொண்டிருந்த கணவர் சிறிது நேரத்திற்குப் பின் எவ்வித சப்தம் இன்றி இருந்ததால் அவர் தூங்கிவிட்டதாக நினைத்துள்ளார் நாகஜோதி. காலையில் எழுந்து கதவை திறக்க முயன்றபோது திறக்காததால் அருகிலிருந்த உறவினர்களுக்கு நாகஜோதி தகவல் கொடுத்துள்ளார்.

விரைந்து வந்த உறவினர்கள் கதவை உடைத்து நாகஜோதியை மீட்டனர். பின்பு ரத்தனகிரி உறங்கிக்கொண்டிருந்த கதவையும் உடைத்துப் பார்த்தபோது ரத்தனகிரி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து வேடசந்தூர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த ரத்தனகிரியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ரத்தினகிரி தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நினைத்து கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “என்னை போதைக்கு அடிமையாக்கியதால் தாய்மாமாவை கொன்றேன்” - இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்!