Tamilnadu

“தோட்டத்தில் மது அருந்திய கும்பலை தட்டிக்கேட்ட மாணவர் குத்திக்கொலை” : சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்!

சிவகங்கையில் தங்களது தோட்டத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பலை கண்டித்த மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் இருதயராஜ். இவர், தனது மகன்கள் ஜோசப் சேவியர் (25), கிறிஸ்டோபர் (22) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

ஜோசப் சேவியர், கிறிஸ்டோபர் இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வருகின்றனர். சேவியர் நான்காம் ஆண்டும், கிறிஸ்டோபர் முதாலம் ஆண்டும் படித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக தற்போது ஊரில் இருந்தபடி ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இருதயராஜின் தோட்டத்தில் ஒரு 10 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருப்பதாக ஆடு மேய்பவர்கள் சிலர் இருதயராஜிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இருதயராஜ் மகன்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்று அந்த கும்பலிடம் தட்டி கேட்டுள்ளார். அப்போது எற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதில் கிறிஸ்டோபர் (22) சம்பவ இடத்திலேயே பலியானார்.

தொடர்ந்து, ஜோசப் சேவியரையும் அந்த கும்பல் கத்தியால் குத்தியுள்ளது. இருதயராஜூம் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த போலிஸார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிவகங்கை நகர் காவல் துறையினர் மற்றும் மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குடிபோதையில் நடந்ததா? கூலிப்படையால் நடந்ததா? அல்லது இடத்தகராறு காரணமா? முன்பகையா? என பல்வேறு கோணங்களில் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Also Read: ஆணுறுப்பை அறுத்து இளைஞர் கொலை... காதலியின் வீட்டின் முன்பே உடலை எரித்த உறவினர்கள் : பீகாரில் பயங்கரம்!