Tamilnadu
அ.தி.மு.க ஆட்சியில் கோவை ஆவின் நிர்வாகத்தில் ரூ.100 கோடி ஊழல்... சிக்கும் முன்னாள் அமைச்சர், அதிகாரிகள்!
கோவை ஆவின் நிர்வாகத்தில் கடந்த ஆட்சிகாலத்தில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. 5 டன் ஸ்வீட்பாக்ஸ் மாயமாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது உயர் பொறுப்பில் கடைசி 3 ஆண்டு காலமாக இரண்டெழுத்து அதிகாரி ஒருவர் பணி புரிந்துள்ளார். இவரது பதவிக்காலத்தில், ஊழல், முறைகேடு தலை விரித்தாடியுள்ளது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இவர், கடந்த அ.தி.மு.க ஆட்சியில், ஆவின் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் தமிழ்நாடு முழுக்க அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்காக செய்து கொடுத்துள்ளார். வரவு - செலவு கணக்குகளை சரிபார்த்து, ராஜேந்திர பாலாஜியின் வலதுகரமாக செயல்பட்டு வந்துள்ளார். ஆவின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் என அனைத்து பணிகளையும் இவரே செய்துள்ளார்.
இந்நிலையில், கோவை ஆவின் நிர்வாகத்தில் 3 ஆண்டு கால வரவு -செலவு கணக்குகளை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது ஆவின் பார்லர்களில் பணம் வசூலிப்பது, வேண்டிய நபர்களுக்கு டெண்டர் விடுவது மற்றும் டிரான்ஸ்போர்ட் பிரிவு, பர்ச்சேஸ் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவு ஆகியவற்றுக்கு பொருட்கள் வாங்கியது, பால் பதப்படுத்தும் பணிக்கு தேவையான இயந்திரங்கள் வாங்கியது, கொரோனா தொற்று காலத்தில் சானிடைசர், மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கியது என பலவற்றிலும் மெகா ஊழல் நடந்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு ஜெனரேட்டர் மெஷின் வாங்கியதில் ரூ.25 லட்சம் ஊழல் நடந்துள்ளது.
இப்படியாக 3 ஆண்டுகாலத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது முக்கிய பிரமுகர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கவேண்டும் என கணக்கு எழுதி, 5 டன் இனிப்பு பதார்த்தங்கள் வெளிமார்க்கெட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
ஆவின் நிர்வாக இயக்குனர்கள் சபை கூட்டத்தின் அஜென்டாவில், வரிசை எண் 22-ல் இதுகுறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாம் தற்போதைய கணக்கு தணிக்கையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஆவினில் ஏற்படும் நஷ்டத்தை பற்றி, கவலை கொள்ளாமல் அந்த அதிகாரி எந்த ஃபைலை எடுத்து நீட்டினாலும் கண்ணை மூடிக்கொண்டு அப்போதைய ஆவின் தலைவர் கே.பி.ராஜூ கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளார்.
இவர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தார். சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்துவிட்டார். முக்கிய கோப்புகளில் இவர் போட்டுள்ள கையெழுத்துகள், ஆதாரமாக திரட்டப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் முழு அளவிலான விசாரணை நடைபெற்றால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்கடை நிலை ஊழியர் வரை பல பேர் சிக்குவார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது.
Also Read
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!