Tamilnadu

“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!” : நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த திருத்துவபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியதர்ஷினி. இவரது கணவர் ராஜ ஷெரின் திருமணத்தின் போது 101 சவரன் நகை மற்றும் 5 லட்ச ரூபாய் பணம் 2 கோடி மதிப்பிலான சொத்து ஆகியவற்றை வரதட்சணையாக வாங்கியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து கணவர் ராஜ ஷெரின் மனைவி பிரியதர்ஷினியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

ராஜ ஷெரினின் பெற்றோரும் பிரியதர்ஷினியை கொடுமைப்படுத்திய நிலையில், பிரியதர்ஷினி போலிஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சட்ட ஆலோசகரின் அறிவுரையின் பேரில் தனியாக வீடு எடுத்து இருவரும் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், ராஜ ஷெரின் சென்னையில் தனக்கு அதிக ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது என்றும் வேலையில் சேர்ந்ததும் உன்னை அழைத்துச் செல்கிறேன் என்றும் கூறிச் சென்றவர் மீண்டும் ஊருக்கு வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு வந்த ராஜ ஷெரின் உடனடியாக கிளம்பிய நிலையில், அவரைத் தேடி அவரது பெற்றோரின் வீட்டுக்குச் சென்றுள்ளார் பிரியதர்ஷினி.

ராஜ ஷெரின் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோர் சேர்ந்து வழக்கறிஞர் பிரியதர்ஷினியை வெளியே தள்ளி கேட்டை பூட்டியுள்ளனர்.

இதனால் கலங்கிய பிரியதர்ஷினி “எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கி வருகிறேன்.. என்னை வீட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் கேட்டை திறந்து விடுங்கள்” என கதவைப் பிடித்தபடியும், சாலையில் அமர்ந்தும் கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில் தக்கலை போலிஸார் வந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “நான் ஜட்ஜ் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கும் நிலையில் என்னை ஜட்ஜ் ஆக விடமாட்டேன் என அவரது வீட்டார் மிரட்டி வருகிறார்கள். எனது கணவர் எனக்கு வேண்டும். நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்” என போலிஸாரிடம் கலங்கியுள்ளார் பிரியதர்ஷினி.