Tamilnadu

”மீன்வள மசோதா 2021: மாநிலங்களின் உரிமையை பறிக்கும் திட்டத்தை கைவிடுக” - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரின்போது ஒன்றிய அரசு நிறைவேற்ற உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021, “இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால், அதனை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாமென்று வலியுறுத்தி, ஒன்றியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது என்றும், இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் மாநிலப் பட்டியலின்கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகளைக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல் (Criminalisation), சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகளை எடுத்தல் (Use of force), கட்டணங்களை விதிப்பது, பெரும் அபராதங்களை விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் இருப்பதால், இது பரவலாக எதிர்ப்புகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைத்துத் தரப்பு மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகள் நடத்தியபிறகு, அவர்களின் கருத்துகளைப் பெற்று, மீனவர் நலன் காக்கும் வகையிலும், கடல் வளத்தைக் காக்கும் வகையிலும், புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய கடல்சார் மீனவர் மசோதா 2021-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியினை தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: தி.மு.க அரசின் அடுத்த அதிரடி: உச்சபட்ச அச்சத்தில் EPS-OPS & Co; பட்டியலில் யார் யார்?