Tamilnadu

“சங்கடமா இருக்கு நண்பர்களே... பணம் அனுப்பிய பிறகு பதிலே இல்ல” - இன்ஸ்டாகிராம் மோசடியால் கொதித்த நடிகை!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பலரும் சிறு வணிகங்களை மேற்கொண்டு வரும் நிலையில், மோசடி பக்கங்களும் அதிகரித்துள்ளன. அப்படியான மோசடி வணிகப் பக்கம் ஒன்றால் நடிகை ரேஷ்மி மேனன் பாதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை ரேஷ்மி மேனன் ‘இனிது இனிது’, ‘பர்மா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவர் நடிகர் பாபி சிம்ஹாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், ரேஷ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்ஸ்டாகிராம் வணிகப் பக்கம் ஒன்றின் மோசடி குறித்து தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் செயல்படும் 'Accessories for her' எனும் பக்கத்தில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார் ரேஷ்மி மேனன். அதில் கேஷ் ஆன் டெலிவரி வசதி இல்லை என்பதால் ஆர்டருக்குரிய பணத்தைச் செலுத்தியுள்ளார்.

ஆனால், அந்தக் குறிப்பிட்ட வணிகப் பக்கத்தை நடத்துபவர்கள் ரேஷ்மி மேனனுக்கு பொருட்களை அனுப்பாமல் மோசடி செய்துள்ளனர். இரண்டு மாதங்கள் கடந்தும் அந்தப் பக்கத்தில் இருந்து எந்தவொரு பதிலும் வராத நிலையில் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரேஷ்மி மேனன்.

அதில், "நான் எப்போதும் சிறு வணிகங்களை ஆதரிக்கிறேன், அவர்களிடம் ஆர்டர் செய்வதை விரும்புகிறேன். இந்தப் பக்கத்தில் நான் ஒரு ஆர்டர் செய்தேன். பணம் செலுத்திய பிறகு எந்த பதிலும் இல்லை. 2 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது பலரும் இன்ஸ்டாகிராம் மூலம் சிறு தொழில்களை நடத்துகிறார்கள். ஏமாற்றப்படுவதைப் பார்க்கும்போது வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மக்களே உஷார்... சாலையோர வாசிகள் பெயரில் போலி சிம் கார்டு; லோன் தருவதாகக் கூறி டெல்லி கும்பல் நூதன மோசடி!