Tamilnadu
அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் முறைகேடு... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மாணிக்காபுரம் புதூரைச் சேர்ந்த விஸ்வலிங்க சாமி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலின் போது, திருப்பூர் மாணிக்காபுரம் புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்ததாகவும் ஆனால் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி தேர்தல் நடைபெறவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் 95% கூட்டுறவு சங்கங்களுக்கு முறையான தேர்தல் நடத்தாமல் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தன்னிச்சையாக தேர்வு செய்யப்பட்டதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூட்டுறவு சங்கங்களைப் பொறுத்தவரை 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கடன் மோசடி நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் தலைவராக இருப்பதனால் தங்களுடைய பினாமிகள் கடன் அளித்துள்ளதாகவும் இதனால் அவர்கள் பலன் அடைந்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி 11,500 கோடி ரூபாயில் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்களே பயன்பெற்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே இதுகுறித்து உரிய விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
Also Read
-
மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.4000 கோடி நிதி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தது என்ன?
-
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு : இடைக்கால பட்ஜெட் - முக்கிய அம்சங்கள் என்ன?
-
“25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
-
அமித்ஷா பேச்சை கேட்டு ரங்கசாமி சிரிக்கிறார் : இரட்டை எஞ்சின் புதுச்சேரியிலும் டப்பா எஞ்சின் தான்!
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !