Tamilnadu

விபரீதமான விளையாட்டு: நண்பனை எட்டி உதைத்த போதை நபர்; கிணற்றில் விழுந்து பலி !

சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் புருசோத்தமன்(37), இவர் கடந்த 5ம் தேதி மாலை தனது நண்பர்களோடு சேர்ந்து அதே தெருவில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர்.

அப்போது அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது நீச்சல் அடித்த களைப்பில் சிலர் கிணற்றில் மேல் அமர்ந்திருந்தனர். இந்த சூழ்நிலையில் பின்னால் வந்த கார்த்திக்(36) என்பவர் முதுகில் எட்டி உதைத்து கிணற்றில் தள்ளினார். இதில் புருசோத்தமன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

நீரில் மூழ்கியவர் வராததால் அவரை தேடிப் பார்த்து மீட்ட நண்பர்கள் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் அவரது மனைவி அனுசுயா தனது கணவருக்கு நன்றாக நீச்சல் தெரிந்த நிலையில் எப்படி நீரில் மூழ்கி உயிரிழப்பார் என போலீசாரிடம் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பினார்.

இதனால் சிட்லபாக்கம் போலீசார் நிகழ்விடத்தில் சென்று விசாரணை செய்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது அதில் புருசோத்தமனை, கார்த்திக் காலால் எட்டி உதைத்து கிணற்றில் தள்ளியது தெரியவந்தது.

அதனடிப்படையில் கார்த்திக் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில் குடிபோதையில் விளையாட்டாக எட்டி உதைத்தேன் அவர் இறப்பார் என்று நினைக்கவில்லை என்று கண்ணீர் மல்க போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

174 பிரிவின் கீழ் போடப்பட்ட வழக்கை 304 பிரிவாக மாற்றி கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: தொழிலதிபரை கடத்தி மோசடி: கானத்தூரில் பதுங்கிய இந்து மகா சபா தலைவர் CBCID போலிஸாரால் அதிரடி கைது!