Tamilnadu

“என் மகள், மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பா.ஜ.க நிர்வாகி” : காவல்நிலையத்தில் கதறிய நபர்!

சென்னை மூலக்கடையைச் சேர்ந்த தம்பதியர், அதே பகுதியில் வசிக்கும் பா.ஜ.கவை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்தசாரதி மீது பாலியல் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பா.ஜ.கவை சேர்ந்த பார்த்தசாரதி, எனது மகள் மற்றும் மனைவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். பார்த்தசாரதியின் மனைவி ஜோசியம் பார்ப்பவர்.

இதனால் எனது மனைவி அவரது வீட்டிற்குச் சென்று வந்தார். அப்போது அவரது மனைவி இல்லாதபோது, எனது மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். இப்படி தொடர்ச்சியாக எனது மனைவிக்கும், மகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்தசாரதி மீது புகார் கொடுத்தோம். ஆனால் போலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது பார்த்த சாரதி, “நீ யார் கிட்ட வேணா புகார் கொடு, நான் பா.ஜ.கவை சேர்ந்தவன். என்னை உங்களால் எதுவும் செய்ய முடியாது” என மிரட்டினார்.

தற்போது மீண்டும் எனது மகளுக்குத் தொந்தரவு கொடுத்து வருகிறார். ஏதாவது கேட்டால் வீட்டின் முன் வந்து தவறான வார்த்தைகளால் பேசி மிரட்டுகிறார். அவரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யாரும் எதுவும் கேட்பதில்லை. பல குடும்பங்கள் இவரின் தொந்தரவு தாங்க முடியாமல் வீட்டை காலி செய்து கொண்டு சென்றுவிட்டனர். நாங்கள் சொந்த வீட்டில் வசிப்பதால் எங்கும் செல்ல முடியவில்லை.

மேலும், அவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளரை ஏமாற்றி, அங்கேயே தங்கி வருகிறார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரை அடுத்து, அவரை இரண்டு வருடம் பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இருந்தபோதும் அவர் அதே வீட்டிலிருந்து கொண்டு தொடர்ச்சியாக எதிர் வீட்டில் இருக்கும் எங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்.

தற்போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டிஜிபி நடவடிக்கை எடுப்பார் என்பதால் நாங்கள் புகார் கொடுக்க வந்துள்ளோம். பா.ஜ.கவை சேர்ந்த பார்த்த சாரதி மீது நடவடிக்கை எடுத்து, மனைவியையும், மகளையும் காப்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: தொழிலதிபரை கடத்தி மோசடி: கானத்தூரில் பதுங்கிய இந்து மகா சபா தலைவர் CBCID போலிஸாரால் அதிரடி கைது!