Tamilnadu
“கொங்கு நாடு கோரிக்கை ஆபத்தானது; பா.ஜ.க-வின் சூழ்ச்சியை முறியடிப்போம்” : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
கொங்கு மண்டலத்தைத் தனியாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பா.ஜ.கவினர் கருத்து கூறுவது ஆபத்தானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சி.பி.ஐ.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “ஒன்றிய அரசு ஏற்கெனவே மாநில உரிமைகளில் பலவற்றை பறித்துள்ள நிலையில், கூட்டுறவுத் துறை போன்ற துறைகளையும் கைப்பற்றும் நோக்கில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.
மேகதாது அணையை அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களே எதிர்க்கின்றனர். எனினும், வரும் தேர்தலில் மக்களிடம் வாக்குகள் பெறவேண்டும் என்பதற்காக கர்நாடக அரசு பிடிவாதம் பிடிக்கிறது.
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தைத் தனியாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பா.ஜ.கவினர் கருத்து கூறுவது ஆபத்தானது. மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் கொல்லைப்புறமாக பா.ஜ.க நுழைய நினைத்தால் அதற்கான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த சூழ்ச்சியை அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றுசேர்ந்து முறியடிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. 3-வது அலை வந்தாலும் அதையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வராதவரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாகத் தளர்த்தக் கூடாது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீது எழும் புகார்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகள் ஏதுமின்றி நெல் கொள்முதல் செய்வதற்குத் தேவையான வசதிகளைத் தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!