Tamilnadu

டெல்லி பசுமைத் தீர்ப்பாய அமர்வின் உத்தரவுதான் நாடு முழுதும் பொருந்தும் எனக் கூற முடியாது - சென்னை ஐகோர்ட்

நிலக்கரி இறக்குமதிக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு பெற தேவையில்லை என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பை எதிர்த்து, சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், இந்த விவகாரம் நாடு முழுவதுக்குமானது எனக் கூறி வழக்கை, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஐந்து அமர்வுகளும் பிறப்பிக்கும் உத்தரவுகள், நாடு முழுவதற்கும் பொருந்தும் எனவும், டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பிக்கும் உத்தரவுதான் நாடு முழுவதும் பொருந்துமென கூற முடியாது என தெளிவுபடுத்தியது.

மேலும், வழக்கு தொடர்வதற்காக டெல்லி வரைக்கும் சென்று அதிக செலவு செய்யக் கூடாது என்பதற்காகவே ஐந்து மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதிகள், டெல்லி தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவே நாடு முழுவதற்கும் பொருந்தும் என்ற நடைமுறையை பின்பற்றினால், அது நீதி மறுப்பதற்கு சமம் எனக் குறிப்பிட்டனர்.

மக்களுக்கு நீதி வழங்கவே தாலுகா அளவில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்து, விசாரணையை ஜூலை 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also Read: "தடுப்பூசி விஷயத்தில் ஒன்றிய அரசு அரசியல்தான் செய்கிறது" : மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் பதிலடி!