Tamilnadu

சென்னையில் இன்ஸுரன்ஸ் பணத்துக்காக கடத்தல் நாடகமாடிய போதை ஆசாமியும் நண்பரும்; வண்டலூரில் சிக்கியது எப்படி?

சென்னை அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (68). இவர் உயர் நீதிமன்றத்தில் கடந்த 30 வருடமாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு இவரது ஒரே மகன் இறந்துள்ளார். தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் இவரது மனைவியின் தங்கை மகன் சண்முகம் என்பவர் கடந்த இரண்டு வருடமாக இவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் தங்கி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் ராஜேஸ்வரனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் உறவுக்கார நபர் சண்முகத்தை கடத்தி வந்துள்ளோம். தற்போது மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்துள்ளோம். 10 லட்சம் கொடுத்தால் அவரை அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். இது குறித்து ராஜேஸ்வரன் அம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்ம நபர் தொலைபேசி எண்ணை வைத்து அம்பத்தூர் போலீசார் வண்டலூரில் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சண்முகமும் மற்றொரு நபரும் குடி போதையில் படுத்து இருந்தது தெரியவந்தது.

இருவரையும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜேஸ்வரன் மகன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் அவருக்கு 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்துள்ளது. அந்த பணத்தை அபகரிக்க சண்முகம் தனது நண்பர் ரவி என்பவருடன் கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: சேப்பாக்கம் தொகுதியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது எப்படி? - உதயநிதி ஸ்டாலின் MLA விளக்கம்!