Tamilnadu

ரூ.10 லட்சம் கேட்டு உடலை தரமறுத்த தனியார் மருத்துவமனை: அரசின் நடவடிக்கையால் பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!

சென்னை கொளத்தூரை சேர்ந்த பர்வேஷ் அபிமன்யு என்ற நான்கு வயது குழந்தை, Acute cardio myopathy என்ற இதய நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அரும்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு, எக்மோ சிகிச்சை துவங்கிய நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு7 மணி அளவில் உயிர் பிரிந்தது.

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை ஏற்க முடியாது, ஒரு நாள் மருத்துவ கட்டணம் 10 லட்சம் செலுத்தினால் மட்டுமே உடலை கொடுக்க முடியும் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், என்ன செய்வதென்று திகைத்த பெற்றோர் உடனடியாக அரசு மருத்துவத்துறையை அணுகி உதவி கேட்டுள்ளனர்.

இதனையடுத்து டி.எம்.எஸ் மருத்துவ அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை புறக்கணிக்க வேண்டாம், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்திடம் கேட்டு, உடனடியாக குழந்தையின் உடலை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது பேட்டியளித்த அரசு கூடுதல் இயக்குனர் டாக்டர் விஸ்வநாதன், “முதலமைச்சர் காப்பீடு திட்டத்தை தனியார் மருத்துவமனைகள் ஏற்று சிகிச்சை அளிக்க வேண்டும். கூடுமானவரை மக்கள் அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் பெற வேண்டும்” என்று எச்சரித்தனர்.

குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தங்கள் கோரிக்கை உடனடியாக அரசு செவிமடுத்து உடலை மீட்டு தந்தமைக்கு நன்றி தெரிவித்தனர் .

Also Read: "மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி சட்டப்படி தடுக்கப்படும்" : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!