Tamilnadu

“அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராகும் பணி நியமனத்தில் வயது வரம்பை தளர்த்த வேண்டும்”: கி.வீரமணி கோரிக்கை!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனத்தில், வயது வரம்பு 35 என்பதைத் தளர்த்தி - பயிற்சி பெற்ற அனைவரையும் பணி நியமனம் செய்யவேண்டும் என என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்து நிறைவேற்றிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட சட்டமாகும். தந்தை பெரியாரை ‘அரசு மரியாதை'யுடன் அடக்கம் செய்ய முடிந்த தனது ஆட்சியில், ‘அவர் நெஞ்சில் தைத்த முள்ளை'அகற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர்!

பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிப்புச் சட்டமாக 1970 இல் தொடங்கியது இந்த அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் 'ஜாதி - தீண்டாமை' ஒழிப்புச் சட்டம். இந்த சட்டத்தை எதிர்த்து பார்ப்பனர்கள் இரண்டுமுறை நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கே வழக்குகள்மூலம் படையெடுத்து தடுக்கப் பார்த்தனர்.

அம்முயற்சியில் அவர்கள் கண்டது தோல்வியே! இரண்டாவது முறை ஆகம விதிகளை அறிந்தோர் மட்டுமே அர்ச்சகர்களாக முடியும் என்பதையும் கலைஞர் அரசு மிகச் சிறப்பாக இரண்டு வகை ஆகமங்களுக்குரிய பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கி, 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி அனைத்து ஜாதி மாணவர்களையும், பார்ப்பனர்கள் உள்பட - அர்ச்சகர் பட்டயப் படிப்பில் 205 பேரை தயாரித்தும், வெற்றி வாகை சூடியது; என்றாலும், கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை. காரணம், வெளிப்படை!

கலைஞரின் ஆற்றல்மிகு பிள்ளையாக- மனிதநேயத்தின் உருவமாக..

கலைஞர் அரசின் விருப்பத்தை - கொள்கையை - அவரது ஆற்றல்மிகு பிள்ளையாக - மனிதநேயத்தின் உருவமாக உள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதிப்படி, 'பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும்' பெரும் பணியை நேர்த்தியாக செய்ய தி.மு.க. ஆட்சி இன்னும் சில வாரங்களில் ஆயத்தமாகிறது. (கேரள அரசு நமக்கு முன்பே முந்திக்கொண்டது - அங்கே அந்த வாய்ப்பு கிட்டியது).

கடந்த 14 ஆண்டுகளாக வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் 205 பேரில், இரண்டு, மூன்று பேர் இறந்துவிட்டனர் என்பது வேதனையான செய்தியாகும். எஞ்சியுள்ளவர்கள் எப்போது பணி நியமனம் என்ற ஏக்கத்தோடும், அதேநேரத்தில் நம்பிக்கையை இழக்காமலும் காத்திருக்கின்றனர்.

இரண்டு முக்கிய வேண்டுகோள்!

அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், மாண்புமிகு முதலமைச்சருக்கும், இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கும் இரண்டு முக்கிய வேண்டுகோளை வைத்திருக்கின்றனர்.

1. அர்ச்சகர்கள் நியமன வரம்பில் (இம்முறை) வயது வரம்பில் - விதிவிலக்காக - தளர்வுகளை வேண்டியுள்ளனர்.

''கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்மூலம் 2007-2008 ஆம் கல்வியாண்டில் முறையாக அர்ச்சகர் 'தீட்சை' பெற்றுள்ளோம்.

ஆகமம் கற்று தீட்சை பெற்றவர்களாகிய எங்களில் கவுண்டர், தேவர், வன்னியர், முதலியார், யாதவர், தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பார்ப்பனர் உள்பட அனைத்து ஜாதியினரும் உள்ளனர்.

வயது வரம்பில் தளர்வு....

2020 ஆம் ஆண்டு (அ.தி.மு.க. ஆட்சியில்) உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு விதிகளில், அர்ச்சகராவதற்கு வயது வரம்பு 35 ஆக (உச்சவரம்பு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள் பணி நியமனம் எங்களுக்கு கிடைக்காததற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல.

தற்போது அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடையவர்களாகிய எங்களில் 35 வயதிலிருந்து 40 வயது உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 76 பேர் (மூன்றில் ஒரு பகுதி) வயது வரம்பு தளர்வுகளைத் தரவில்லையானால், இந்த 79 பேரும் விண்ணப்பிக்கவே வாய்ப்பு கிட்டாத நிலை ஏற்படும். எனவே, 35 வயதுக்கு மேற்பட்டுள்ள - பணி நியமனத்திற்கு முன்பு, வயது வரம்பில் தளர்வு (ஒரு சிறப்பு விதிவிலக்காக இவர்களுக்கு மட்டும்) அளிக்கவேண்டும் என்ற அவர்களது கோரிக்கையில் மிகவும் நியாயம் உள்ளது.

பலருக்கும் மனிதாபிமானத்துடன் உதவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற பெயர் எடுத்துள்ள நிலையில், இவர்களது வாழ்க்கையையும் மலரச் செய்து, 'நெஞ்சில் பால் வார்க்க' முன்வருதல் அவசரமும், மனிதநேயமுமாகும். பரம்பரை முறை அர்ச்சகர்களே தொடர்ந்து பணியில் இருப்பது சட்ட விரோதமானதல்லவா?

பாரம்பரிய அர்ச்சகர் முறை ஒழிப்புச் சட்டம் அமுலுக்கு வந்து, உச்சநீதிமன்றம் ஏற்று, சுமார் 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்றுவரை, மதுரை மீனாட்சியம்மன் கோவில், பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்கள், சிறீரங்கம் ரங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்கள் பரம்பரை முறை அர்ச்சகர்களே தொடர்ந்து பணியில் இருப்பது சட்ட விரோதமானதல்லவா? இதுபற்றி ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் குழு கொடுத்த அறிக்கையில் பல விரிவான தகவல்கள் கிடைக்கின்றன.

விரைந்து ஆவன செய்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

எனவே, இந்த வேண்டுகோளை நிறைவேற்றி, நியமனங்களை நடத்திடுமாறு பாதிக்கப்பட்டவர்களின் பரிதாபக் குரலுக்குச் செவிமடுத்து, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும், அறநிலையத் துறை அமைச்சரும் விரைந்து ஆவன செய்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அன்று பெரியார் செய்ததை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார்” : முரசொலி தலையங்கம் புகழாரம் !