Tamilnadu

“அரசுத் திட்டங்களுக்கு அண்ணா பெயர்..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் (30.6.2021) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு :-

திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றப் பின்னர், காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து அறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்து பெற வேண்டும் என்று நான் கருதிக்கொண்டு இருந்தேன். கொரோனா தொற்றின் காரணமாக, ஊரடங்கு இருக்கின்ற இந்த சூழ்நிலையில், அதற்கான வாய்ப்பு இன்றைக்குத்தான் எனக்கு கிடைத்தது. எனவே, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, எங்களை ஆளாக்கிய, கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து, அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து நான் மரியாதை செலுத்துகிறேன்.

“மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று'' என்ற அறிவுரையை தம்பிமார்களுக்கு அவர் எப்போதும் வழங்கிக்கொண்டு இருந்தவர். அதை நினைவுப்படுத்தி, "அவர் தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடுநடை போடும் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று நான் அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கின்ற இந்த நேரத்தில் குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதியிருக்கிறேன்.

கேள்வி: ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்று அவருடைய பெயரில் பல நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டது, இந்த ஆட்சிக்காலத்திலும் அதுபோன்று தொடர்ச்சியாக அரசுத் திட்டங்களுக்கு அவர் பெயர் வைக்கப்படுமா?

முதலமைச்சர் அவர்களின் பதில் : விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறபோது, நீங்கள் எதிர்பார்ப்பது போல அந்தச் செய்திகள் எல்லாம் வரும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஒன்றியம் விவகாரம் - குருமூர்த்தியின் குதர்க்கமும் தமிழிசையின் தர்க்கமான பதிலடியும்” : முரசொலி தலையங்கம்!