Tamilnadu

“இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமையை தி.மு.க அரசு நிச்சயம் பெற்றுத்தரும்” : திருச்சி சிவா உறுதி!

திருச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து திருச்சி மாநகராம் கொட்டப்பட்டு அகதிகள் முகாமினைப் பார்வையிட்டு ஆய்வு செய்யதனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் அல்லாமல் வெளியில் காவல்துறையில் பதிவு செய்து வாழும் இலங்கைத் தமிழர் குடும்பத்திற்கு கொரோனா கால நிவாரண நிதி ரூபாய் 4000 வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொரோனா கால நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எம்.பி திருச்சி சிவா, “தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் தொடங்கிவிட்டது. குடியுரிமைச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன். அந்தக் கோரிக்கையை எழுப்புவதற்கு உந்துசக்தியாக இருந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தருவதற்கும், இங்குள்ள மக்களைப் போலவே அனைத்து உரிமைகள், அனைத்து அடிப்படை வசதிகள் ஆகியவற்றுடன் வாழ்வதற்கான உத்தரவாதத்தை தி.மு.க அரசு நிச்சயம் தரும். உங்களது வாழ்வின் இப்போதைய நிலை மாறும், எதிர்காலம் வளமாக அமையும். அதற்கு முதல்வர் உறுதுணையாக இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அ.தி.மு.க ஆட்சியில் ஆவின் பணி நியமனத்தில் ஊழல் முறைகேடு” : அடுத்தடுத்து சிக்கும் அ.தி.மு.க தலைகள்!