Tamilnadu

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளை உருட்டுக்கட்டையால் தாக்கி பா.ஜ.க பிரமுகர் அராஜகம்... இருவர் கைது!

திருவண்ணாமலையை அடுத்த ஊசாம்பட்டி ஏரிக்கரையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக துரிஞ்சாபுரம் வருவாய் கிராம அலுவலருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து வருவாய் ஆய்வாளர் சாஜியா பேகம் மற்றும் நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றினர். அப்போது அந்த வழியாக வந்த புதுமல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ரகுநாத் மற்றும் சக்திவேல் ஆகியோர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அங்கிருந்து உருட்டுக் கட்டைகளை எடுத்து அதிகாரிகளையும் பா.ஜ.க பிரமுகர்கள் தாக்கியுள்ளனர். இவர்களின் அராஜகத்தை தொலைபேசியில் படம் எடுத்த வருவாய் அலுவலர் சாஜியா பேகத்தின் தொலைபேசியைப் பறித்து உடைத்துள்ளனர்.

இதையடுத்து காயமடைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்து குமாரசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இது குறித்து வருவாய் ஆய்வாளர் சாஜியா பேகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் பா.ஜ.க பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ரகுநாத் மற்றும் சக்திவேலை கைது செய்தனர்.

Also Read: ‘சங்கறுத்துடுவேன்’ என சேலத்தில் போலிஸாரை மிரட்டி அவினாசியில் பதுங்கிய இந்து முன்னணி பிரமுகர் கைது!