Tamilnadu

பல்வேறு பணிகளில் முத்திரை பதித்த சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பியாக நியமனம்!

தமிழ்நாடு டி.ஜி.பியாக உள்ள திரிபாதி நாளையுடன் ஓய்வுபெறுவதால் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியை தேர்வு செய்யும் பணி சில நாட்களாக நடந்து வந்தது. டி.ஜி.பி நியமனத்திற்கான பரிந்துரை பட்டியலை ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழ்நாடு அரசு அணுப்பியது.

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்திருந்து வந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சைலேந்திர பாபு குழித்துறையைச் சேர்ந்தவர். எம்.எஸ்.சி, எம்.பி.ஏ, பி.ஹெச்.டியையும், சைபர் கிரைம் ஆய்வுப் படிப்பையும் முடித்தவர்.

1987ஆம் ஆண்டு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சைலேந்திரபாபு 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய சைலேந்திர பாபு, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் எஸ்.பியாகவும், சென்னை அடையாறில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜியாகவும் முத்திரை பதித்தவர் சைலேந்திரபாபு.

வடக்கு மண்டல ஐ.ஜியாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திர பாபு கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டி.ஜி.பியாகவும் பதவி வகித்துள்ளார்.

சிறைத்துறை தலைவராக இருந்தபோது கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தார்.

தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை டி.ஜி.பியாக இருந்தவர். ரயில்வே காவல்துறை டி.ஜி.பியாக தற்போது பதவி வகிக்கிறார்.

குடியரசுத்தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்கான பிரதமரின் பதக்கம், வீரதீர செயல்களுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “சிறப்பான செய்தி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பாராட்டு!