Tamilnadu

”சட்டவிரோத குவாரிகளை கட்டுப்படுத்த திடீர் சோதனை நடத்தலாம்” - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக தொழில்துறைச் செயலாளர் சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

குவாரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டவிரோத குவாரிகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், சட்டவிரோத குவாரிகளை திடீர் ஆய்வுகள் செய்யவும், மாபியாக்களையும் கட்டுப்படுத்தவும் குழுக்களை அமைக்கலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்தனர்.

மேலும், நான்கு வாரங்களில் இதுசம்பந்தமாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.