Tamilnadu
"தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை" : அமைச்சர் பொன்முடி விளக்கம்!
12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இறுதி செய்யப்பட்டுவிடும். மேலும், சி.பி.எஸ்.இ தேர்வு மதிப்பெண்கள் ஜூலை 31ஆம் தேதிதான் வெளியாகிறது.
எனவே,ஜூலை 31ம் தேதிக்குப் பிறகுதான் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் சில தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடப்பதாக தகவல் வருகிறது. இப்போதே தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது.
சி.பி.எஸ்.இ மதிப்பெண், மாநிலக் கல்வி வழியில் பயின்ற மாணவர்களின் மதிப்பெண் வந்தபின்னர், ஆகஸ்டு 1ஆம் தேதிக்குப் பின்தான் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவாகத் தெரிவித்துள்ளார்.
எனவே ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்துதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக்கில் சேர்க்கப்படும் மாணவர்கள் 2 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். இதுதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அரசின் முடிவு.
மேலும், பொறியியல் கல்லூரிகளில் வழக்கமாக இருக்கும் அதே முறைதான் பின்பற்றப்படும். சி.பி.எஸ்.இ, மாநிலக் கல்வி மதிப்பெண்கள் அனைத்தும் ஒரே மதிப்பெண்தான். அதில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைதான் உள்ளது.
மூன்றாம் அலை வருவதாகச் சொல்கிறார்கள். அது வராமல் இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுகிறோம். வழக்கமாக ஜூலையில் கல்லூரி ஆரம்பிக்கும், இம்முறை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் அவ்வளவுதான்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!