Tamilnadu
"தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை" : அமைச்சர் பொன்முடி விளக்கம்!
12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இறுதி செய்யப்பட்டுவிடும். மேலும், சி.பி.எஸ்.இ தேர்வு மதிப்பெண்கள் ஜூலை 31ஆம் தேதிதான் வெளியாகிறது.
எனவே,ஜூலை 31ம் தேதிக்குப் பிறகுதான் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் சில தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடப்பதாக தகவல் வருகிறது. இப்போதே தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது.
சி.பி.எஸ்.இ மதிப்பெண், மாநிலக் கல்வி வழியில் பயின்ற மாணவர்களின் மதிப்பெண் வந்தபின்னர், ஆகஸ்டு 1ஆம் தேதிக்குப் பின்தான் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவாகத் தெரிவித்துள்ளார்.
எனவே ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்துதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக்கில் சேர்க்கப்படும் மாணவர்கள் 2 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். இதுதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அரசின் முடிவு.
மேலும், பொறியியல் கல்லூரிகளில் வழக்கமாக இருக்கும் அதே முறைதான் பின்பற்றப்படும். சி.பி.எஸ்.இ, மாநிலக் கல்வி மதிப்பெண்கள் அனைத்தும் ஒரே மதிப்பெண்தான். அதில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறைதான் உள்ளது.
மூன்றாம் அலை வருவதாகச் சொல்கிறார்கள். அது வராமல் இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுகிறோம். வழக்கமாக ஜூலையில் கல்லூரி ஆரம்பிக்கும், இம்முறை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் அவ்வளவுதான்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!