Tamilnadu

வண்ணமீன் உற்பத்தியாளர்கள் - விற்பனையாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

வண்ணமீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வைத்த கோரிக்கைகள் அத்தனையும் நிறைவேற்றப்படும். தொடர்ந்து இந்த அமைப்புகள் என்னென்ன கோரிக்கைகள் வைக்கிறதோ, அதை அரசு வருகின்ற காலக்கட்டங்களில் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நிச்சயமாக நிறைவேற்றித் தரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

கொளத்தூரில் நடைபெற்ற வண்ணமீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை பின்வருமாறு :-

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான மாலை வணக்கம்.

இந்த நிகழ்ச்சி எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை தொடக்கத்தில் நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அவர்கள் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய உங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ன கோரிக்கை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றோம், எதை இந்த அரசிடமிருந்து எதிர்பார்க்கிறோம், என்பதை பற்றி இங்கே சுருக்கமாக குறிப்பிட்டு சொல்லி இருக்கிறீர்கள். அதேநேரத்தில் மனுக்களையும் தந்திருக்கிறீர்கள், இன்னும் மனுக்களை தருவதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள்.

வண்ணமீன்கள் விற்பனை செய்யக்கூடிய சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் கொளத்தூர் பகுதியில் இருக்கிறது. இதில் 150 வகையான மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கொளத்தூரில் மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 15,000 நபர்களுக்கும் மேல் வேலைவாய்ப்பை பெறக்கூடிய வாய்ப்பு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் தான் வண்ணமீன் பூங்கா அமைக்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு, தேதியும் சொல்ல வேண்டும் என்றால் 19.6.2017 அன்று சட்டமன்றத்தில் உங்களுடைய சட்டமன்ற உறுப்பினராக நான் கோரிக்கை வைத்தேன் என்பது உங்களுக்கு தெரியும். சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த நான், நம்முடைய சேகர்பாபு அவர்களும், மற்றவர்களும், கழக நிர்வாகிகளும் அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து, வண்ணமீன்கள் வானவில் தொழில்நுட்ப பூங்கா தற்போது மாதவரத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும்.

இப்போது இன்னும் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறீர்கள். எதிர்கட்சியாக இருக்கின்ற போதே, சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதே உங்களது கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன் என்றால், இப்போது ஆளுங்காட்சியாக இருக்கும்போது, அதுவும் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் போது அதை நிறைவேற்றி தருவேன் என்ற நம்பிக்கை என்னைவிட இப்போது உங்களுக்குத் தான் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக நீங்கள் வைத்த கோரிக்கைகளை சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், வண்ணமீன்களை விற்பனை செய்கின்ற கடைகள் ஒரே இடத்தில் இயங்க ஏதுவாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை, வண்ணமீன்கள் உணவு உற்பத்தி பயிற்சி மையம் ஏற்படுத்தி பயிற்சி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை, வண்ணமீன்கள் அங்காடி பண்ணைகளுக்கு, மின் கட்டணம் தொழில்சாலைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விதிப்பது போல் இல்லாமல் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் வண்ண மீன்கள் உற்பத்தியாளர்களுக்கு 3ஏ மின்சாரம் வழங்கப்பட்டது.

அந்த மானிய மின்சாரம் தற்போது தடைப்பட்டு விட்டது என்று சொன்னார்கள். இதை வழங்க சம்பந்தப்பட்ட துறையோடு கலந்துபேசி நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வண்ணமீன்கள் விற்பனையகம் அமைத்துதர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு கலந்துபேசி, அதைப்பற்றி ஆய்வு நடத்தி, அதற்குரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். அதனால்தான், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் அழைத்து இந்த நிகழ்ச்சியில் அமர வைத்திருக்கிறோம். ஏன் என்றால், இந்த பிரச்சனையில் அவர்களும் அதிக கவனம் செலுத்த போகிறார்கள். அந்த கவனம் செலுத்தும் முயற்சியில் நிச்சயமாக நானும் ஈடுபடுவேன்.

ஆகவே, நீங்கள் வைத்த கோரிக்கைகள் அத்தனையும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, தொடர்ந்து இந்த அமைப்புகள் என்னென்ன கோரிக்கைகள் வைக்கிறதோ, அதை அரசு வருகின்ற காலக்கட்டங்களில் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நிச்சயமாக நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு எல்லாம் எடுத்துச்சொல்லி, உங்களுடைய அன்பான வரவேற்பிற்கும், உங்களை எல்லாம் கலந்து பேசக்கூடிய நல்ல வாய்ப்பை பெற்றமைக்கும், நான் உள்ளபடியே மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியை, வணக்கத்தை தெரிவித்து, நிறைவு செய்கிறேன், வணக்கம்.