Tamilnadu

"75% மேல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை" : தனியார் கல்லூரிகளை எச்சரித்த உயர்கல்வித்துறை அமைச்சர்!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை இணையவழியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை தரமணியில் மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021 - 22ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "கொரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிப்பதை தவிர்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18,120 இடங்களுக்கு மாணவர்கள் ஜூலை 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதேபோல், 11ம் வகுப்பில் சேர்வதற்கு என்ன தகுதியோ, அதே தகுதிதான் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கும். சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு அடுத்த மாதம் 31ஆம் தேதி தான் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட இருப்பதால் அதற்குப் பின்னர்தான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருக்கிறார். எனவே இதனை மீறி கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Also Read: முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார்: கடுமையான ஆட்சேபம் எழுந்ததால் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி!