Tamilnadu

"இந்தியாவிற்கே முன்மாதிரியாக தி.மு.க அரசு இருப்பதாக பிரதமர் பாராட்டினார்": பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி!

அ.தி.மு.க ஆட்சியை விட, தி.மு.க ஆட்சியில் அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இந்தியாவுக்குத் தமிழ்நாடு முன்மாதிரியாக இருப்பதாக பிரதமர் தி.மு.க அரசைப் பாராட்டியதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆட்சியில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குள் தொடங்கப்பட்டன. மேலும் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டன" என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இறப்பு சான்றிதழில் கொரோனாவால் இறந்தார் என்று குறிப்பிடப்படுவதில்லை. இதற்கு மாறாக தனியாக கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

அ.தி.மு.க ஆட்சியில் சிறு கழிப்பிடத்தை கூட மாற்றி மினி கிளினிக் என பெயர் பலகை வைத்தனர். இதை எதிர்கட்சித் தலைவர் பார்த்தாரா எனத் தெரியவில்லை. மேலும் இதற்கு மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக்கப்படவில்லை.

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தை விட தி.மு.க ஆட்சியில் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிற்குத் தமிழ்நாடு முன்மாதிரியாக இருப்பதாக பிரதமர் தி.மு.க அரசைப் பாராட்டினார்" எனத் தெரிவித்தார்.

Also Read: “நிதிநிலை சீரானதும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்” : நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் உறுதி!