Tamilnadu

சர்வதேச போட்டிக்கு தேர்வாகியும் விளையாட முடியாமல் தவிப்பு: Fistball வீராங்கனைக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஏ.வி.எஸ் பள்ளியில் தபஷ்வினி என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கைமுட்டி பந்து எனப்படும் fistball விளையாட்டில் சிறுவயதில் இருந்து கொண்டிருந்த ஆர்வத்தால் இந்திய அளவில் சிறந்து விளங்குகிறார்.

இந்த நிலையில் விரைவில் ஆஸ்திரியா நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட இவர் தேர்வாகியுள்ளார். இதற்காக சென்னையில் பயிற்சி பெற்று வருகிறார். இருப்பினும் ஆஸ்திரியா சென்று வருவதற்கான செலவுகளுக்கு போதிய பணம் இல்லாததால் நிதியுதவி பெற பல்வேறு தரப்பினரிடமும் கேட்டு வந்துள்ளார்.

இதற்கிடையில் தி.மு.க இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த வாரம் சேலம் மாவட்டம் சங்ககிரி சென்றிருந்த போது, அவரை தபஷ்வினி தனது பெற்றோருடன் சென்று சந்தித்து மனு அளித்துள்ளார். அப்போது நிச்சயம் உதவுவதாக உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தபஷ்வினியின் மனு விரைவாக பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக இன்று வீராங்கனை தபஷ்வினியை ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு அழைத்து நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், அவரது பயணச் செலவுக்கான ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை வழங்கி, சர்வதேச போட்டியில் சிறப்பாக செயல்பட வாழ்த்தினார். மேலும் தந்தை பெரியார் சிலையினையும் அன்பளிப்பாக வழங்கினார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்தார்.

Also Read: போன வாரம் கோரிக்கை; இந்த வாரம் செயல்படுத்திய உதயநிதி ஸ்டாலின் - பெண் இஸ்திரி தொழிலாளிக்கு இன்ப அதிர்ச்சி!