Tamilnadu

"ஏற்கனவே 1,000 ரூபாய் பாஸ் வாங்கியவர்கள் ஜூலை 15 வரை பயன்படுத்தலாம்" : அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் ஜூன் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வெகுவாக குறைந்துள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த நான்கு மாவட்டத்திலும் இன்றே பேருந்து சேவை துங்கியது. பேருந்து சேவை துவங்கியதால், மக்கள் முகக்கவசம் அணிந்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில்,சென்னை பல்லவன் இல்லத்தில் பேருந்துகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் பணியைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தற்போது 1,792 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகள் வருகையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், 16.05.2021 முதல் 15.06.2021 வரை பயணம் செய்யும் வகையில் 1,000 ரூபாய் பாஸ் வாங்கியவர்கள் அந்த பாஸை ஜூலை 15ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல் பேருந்துகள் தினமும் இரவு 9.30 மணி வரை இயக்கப்படும்" என்றார்.

Also Read: பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க ஆன்லைன் வகுப்புக்கான நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!