Tamilnadu

“சான்றிதழ்கள் எளிதில் கிடைக்க போக்குவரத்துறை நவீனமயமாக்கப்படும்” : அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி!

ஓட்டுநர் உரிமம் வழங்குதல் போன்ற சேவைகள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்க போக்குவரத்து துறையில் நவீனமயமாக்கும் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

“போக்குவரதுத் துறையில் போக்குவரத்து ஆணையர் கட்டுப்பாட்டில் இணை, துணை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. கடந்த ஆட்சியில் பல்வேறு குளறுபடிகளால், பொதுமக்களுக்கு கணினி மற்றும் இணையதளம் மூலம் நடைபெற வேண்டிய பணிகள் உரிய நேரத்தில் நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டு, பொதுமக்கள் அலைச்சல் மற்றும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்த நிர்வாகத்தை சீர்செய்யும் விதமாக, தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, போக்குவரத்துத் துறையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தேவைகளான தகுதிச் சான்றிதழ் வழங்குதல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் வாகனங்கள் பதிவு செய்தல் போன்ற சேவைகளை, மேலும் நவீனமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிதில் சுலபமாக கிடைக்க போக்குவரத்து துறையில் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வரின் சீரிய ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகளை களையப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் காலதாமதமின்றி, பொதுமக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இடைத்தரகர்கள், முறைகேடாக செயல்படும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பாகன்கள் முயற்சியால் சாதுவாக மாறிய யானை” : வனத்துறையை திணறடித்த சங்கர் யானை பற்றிய சிறப்பு தொகுப்பு !