Tamilnadu

பதுங்கிய பப்ஜி மதன் கைது: போலிஸார் காலில் விழுந்து கதறல்; தருமபுரியில் சிக்கியது எப்படி ?

இளைஞர்களை அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டான பப்ஜிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்த போது VPN மூலம் பப்ஜிக்கு மாற்றாக ஃப்ரீ ஃபயர் எனும் ஆன்லைன் Game அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது.

ஆன்லைனில் விளையாடுவை தாண்டி அதனை ரெக்கார்ட் செய்து யூடியூபில் வீடியோவாகவே வெளியிட்டு காசு பார்த்துள்ளார் பிரபல Gamer பப்ஜி மதன். முகத்தைக் காட்டாமல் தன்னுடைய குரலை மட்டும் பதிவிட்டு அந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் அவர் தலைப்பிலேயே 18+ என்று பதிவிட்டு ஆபாச வார்த்தைகளை அள்ளித் தெளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது அவரது வீடியோக்கள் அனைத்துமே ஆபாசத்தின் உச்சமாக உள்ளது. அதில் தன்னோடு விளையாடும் சக போட்டியாளர்களின் குடும்ப பெண்கள் பற்றி தரக்குறைவாக திட்டுவதே தனது திறமை என நினைத்து அதனை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார். இந்நிலையில் மதனின் ஆபாச பேச்சுகள் குறித்து புளியந்தோப்பு சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மதன் மீது புகார்கள் குவிந்தன.

புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் மதன் மீது பெண்களை ஆபாசமாகச் சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக பப்ஜி மதன் தலைமறைவானார்.

அவரை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்த மத்திய குற்றப்பிரிவு போலிஸார் நடத்திய விசாரணையில் முதல் ஆளாக சிக்கியது மதனின் மனைவியும் அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலின் நிவாக அதிகாரியுமான கிருத்திகா. அவரை கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தலைமறைவான பப்ஜி மதன் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்ற தள்ளுபடி செய்ததோடு அவரது இழிவான செயல்களுக்கு கடுமையான கண்டத்தையும் தெரிவித்திருந்தது. இப்படி இருக்கையில், மதன் தருமபுரியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து விரைந்த மத்திய குற்றப்பிரிவு போலிஸார் மதனை கையும் களவுமாக பிடித்தனர். நானும் ரவுடிதான் என்பது போல் திரிந்து வந்த மதன் போலிஸாரை கண்டதும் அதிர்ச்சியில் காலில் விழுந்து தன்னை விட்டுவிடுமாறு கதறியதோடு தான் செய்தது தவறுதான் என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து பப்ஜி மதனை சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலிஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும் மதனின் விலையுயர்ந்த 2 கார்களை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னதாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த பப்ஜி மதன் சென்னை பெருங்களத்தூரில் வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார். 2017ம் ஆண்டு அம்பத்தூரில் கள்ளிக்குப்பம் என்ற பகுதியில் ₹10 லட்சம் கடன் பெற்று அசைவ ஓட்டல் ஒன்றினையும் நடத்தியிருக்கிறார். ஆனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்காததால் கடைக்கு வாடகையும் கொடுக்காமல் அப்போதே தலைமறைவாகியிருந்தார். கடையின் உரிமையாளரும் ₹2 லட்சம் வாடகை பாக்கி கேட்டு அம்பத்தூர் காவல் நிலையில் புகாரும் கொடுத்திருந்தார்.

இதனையடுத்தே கடன் கொடுத்தவர்கள் யாருக்கும் தான் இருக்குமிடம் தெரியப்படுத்தாத வகையில் பப்ஜி கேமிற்குள் நுழைந்த மதன் தன்னை பற்றிய எந்த விவரத்தையும் வெளிப்படுத்தாமல் இதுநாள் வரை பணத்தை சம்பாத்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது,.