Tamilnadu

“டேராடூனில் இருந்து திருட்டுத்தனமாக டெல்லி பயணம்” : சிவசங்கர் பாபாவை மடக்கிப் பிடித்த CBCID போலிஸ்!

கேளம்பாகத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியை நடத்தி வருகிறார் சிவசங்கர் பாபா. இவர் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சமூகவலைதளங்களில் சிவசங்கர் பாபா மீது அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பலரும் புகார்களைக் கூறியிருந்தனர்.

இதையடுத்து மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் சார்பில் சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பட்டது. ஆனால், சிவசங்கர் பாபாவுக்கு உடல் நலம் சரியில்லை என ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடு, பள்ளி நிர்வாகிகள் ஆணையத்தில் ஆஜராகினர்.

இந்தநிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3 மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகாரளித்தனர். அதன் பேரில் போலிஸார் போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தனிப்படை போலிஸார் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் விரைந்தனர். அங்கு சிகிச்சையில் இருந்ததாகக் கூறப்பட்ட சிவசங்கர் பாபா காவல்துறை வருவதை அறிந்த அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால், சிவசங்கர் பாபா விமானம் மூலம் தப்பிக்காத வகையில், தேடப்படும் குற்றவாளியாக சி.பி.சி.ஐ.டி போலிஸார் அறிவித்தனர்.

இந்நிலையில், சிவசங்கர் பாபா டெல்லியில் இருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டெல்லி காசியாபாத் பகுதியில் வைத்து சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், கேளம்பாக்கம் பள்ளியில் தற்போது சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: டேராடூன் விரைந்த சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலிஸார்.. பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா கைது?