Tamilnadu

ஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து தனியார் பள்ளி மீட்பு: அறநிலையத்துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் அறிவிப்பு!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் தனியார் பள்ளியை இனி இந்து சமய அறநிலையத் துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குத்தகைக்கு சீதா கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. 1969ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இந்த பள்ளி நிலத்தின் குத்தகை காலம் நிறைவடைந்தது.

மேற்கொண்டு வாடகை செலுத்த முடியாத காரணத்தினால் பள்ளியை இழுத்து மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது. இதனால் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இறுதியில் அறநிலையத் துறை அமைச்சரிடம் இது தொடர்பாக முறையிட்டனர்.

பின்பு அதனை விசாரித்த அறநிலையத்துறை இன்று பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டது. அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்த தனியார் பள்ளி இதுவரை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வந்தது. தொடர்ந்து வாடகை செலுத்த முடியாத காரணத்தினால் இழுத்து மூடப்படுவதாக அறிவித்தது. இந்த தகவலை பெற்றோர்கள் தெரிவித்ததால் இனி இந்த பள்ளியை இந்து சமய அறநிலையத் துறையை ஏற்று நடத்தும் என அறிவித்தார்.

இதற்கு முன்பு பள்ளியில் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதே கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் கட்டணத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் கூறினார். மேலும் பள்ளியில் என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறதோ அதே நடைமுறைகள் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த பள்ளி மேலும் மேம்படுத்தப்பட்டு அதிகமான மாணவர்கள் சேர்ந்து படித்து பயனுறும் வகையில் பல்வேறு வசதிகள் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஏற்படுத்தித்தர உள்ளதாகவும் அவர் கூறினார்.

Also Read: "கோவில் நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் பார்க்காமல் அகற்றப்படும்" : அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!