Tamilnadu

“இனிமேல் வாயே திறக்கமாட்டோம்” : தொலைக்காட்சி விவாதங்களில் தலைகாட்ட அஞ்சும் பா.ஜ.கவினர்!

தொலைக்காட்சி விவாதங்களில் பிரதமர் மோடியையும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சிப்பதால் பா.ஜ.க சார்பாக எவரும் பங்கேற்கப் போவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இனிமேல் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் செய்தி ஊடகங்களின் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் மற்றவர்கள், பிரதமர் மோடியையும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சிப்பதால் பா.ஜ.க சார்பாகப் பங்கேற்பவர்கள் பதிலளித்துப் பேச முடியவில்லை என்று பா.ஜ.க சார்பில் விவாதங்களில் தொடர்ச்சியாகப் பங்குபெற்று வரும் வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

விவாத நெறியாளர்களும் பா.ஜ.க அரசை விமர்சிக்கும் விதமாகவே கேள்வி எழுப்புவதால் பா.ஜ.க சார்பில் எங்களால் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க நிர்வாகிகளின் அதிருப்திகளைக் கேட்ட பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் தற்காலிகமாக பா.ஜ.க சார்பில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் யாரும் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விவாதங்களில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் மனுஷ்யபுத்திரன், தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்டோரின் கருத்துகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறவேண்டிய சூழல் இருப்பதாலேயே பா.ஜ.கவினர் பின்வாங்குவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

Also Read: ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு... 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு!