Tamilnadu
"காஞ்சிபுரம் பட்டுப் பூங்கா.. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று திறக்க நடவடிக்கை" : அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி
ஒன்றிய அரசின் ஜவுளித்துறை சார்பில் கடந்த 2009ம் ஆண்டு பட்டு பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2012ல், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் 75 ஏக்கர் அரசு நிலத்தில் 'பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா' என்ற பெயரில் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதற்கு திட்ட மதிப்பீடான, 83.83 கோடி ரூபாயில், 9 சதவீத தொகையான, 7.54 கோடி ரூபாயை மானியமாக, தமிழ்நாடு அரசு வழங்குவதாகவும், 14 கோடி ரூபாய் மதிப்புடைய 75 ஏக்கர் அரசு நிலத்தை வழங்குவதாகவும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும் 'பட்டு சேலைகள் உற்பத்தி செய்வதற்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பட்டு நெசவாளர்கள் பயன்பெறுவர் எனவும் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த பட்டு பூங்கா அமையவுள்ளது என்பதால், காஞ்சிபுரம் நெசவாளர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், அறிவிப்பு வெளியாகி, 9 ஆண்டுகள் மேலாகியும் இதுவரை பணிகள் துரிதமாக நடைபெறாததால் பட்டு பூங்கா பணிகள் முடங்கியதாக நெசவாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பட்டுப் பூங்காவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, "காஞ்சிபுரத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா பட்டுப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டேன். பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.
முதல்கட்ட பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று செயல்பாட்டு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டு பூங்காவில் அமைக்கப்படவிருக்கும் சாயப்பட்டறை கழிவுகள் முறையாக பராமரிக்கப்பட்டு சுத்தமான நீர் மட்டுமே வெளியேற்றப்படும்” என்றார்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!