Tamilnadu

தஞ்சை கல்லணையில் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. விவசாயிகள் பாராட்டு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணி மற்றும் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்தார். சுமார் 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை இன்று காலை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபெற்று வரும் பணிகள், அதன் தரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், முதலை முத்து வாரி தூர்வாரும் பணியையும், பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக, கல்லணைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆயுதப்படைக் காவலர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் உள்ளிட்ட அதிகாரிகள் புத்தகங்களை அளித்து வரவேற்றனர்.

இந்த ஆய்வின்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் தஞ்சாவூர் பழனி மாணிக்கம், திருச்சி சிவா, எம்.எல்.ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், டிஆர்பி ராஜா, நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, தூர்வாரும் பணி கண்காணிப்பாளர் பிரதீப் யாதவ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Also Read: “தமிழ்நாடு அரசின் புயல் வேக நடவடிக்கை.. 7,500 படுக்கைகள் காலி” : சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!