Tamilnadu
"பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வழிகாட்டுதல் குழு" - அமைத்தது தமிழ்நாடு அரசு!
கொரோனாவால் பெற்றோர் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த வழிகாட்டுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பெற்றோர் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 29-ம் தேதி பல்வேறு நிவாரணத் திட்டங்களை அறிவித்திருந்தார்.
அதில் கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பு நிதியாக அரசு சார்பில் வழங்கப்படும். இந்த தொகை வட்டியுடன் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடையும்போது வழங்கப்படும்.
கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். அதேபோல் அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த நிவாரண திட்டங்களைச் செயல்படுத்த விரைவில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
நிதித்துறை செயலாளரைத் தலைவராகக் இக்குழுவில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர், சமூக நலத்துறை ஆணையர், குழந்தைகள் நலனுக்காக பணியாற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 2 பேர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் இக்குழு கூடி முன்னதாக ஆலோசனை நடத்தியுள்ளது. திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த தேவைப்படும்போது இந்தக்குழுவினர் கூடி ஆலோசனை மேற்கொள்ளுவார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!