Tamilnadu

“இந்தியாவில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு அதிகம்- ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" : கனிமொழி எம்.பி

கருப்புப் பூஞ்சை நோயைத் தடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் போதிய மருந்துகள் அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா ஊரங்கு காலத்தில் பொதுமக்களின் பசியைப் போக்கும் வகையில் இலவசமாக வாழைப்பழம் வழங்கிவந்த பழ வியாபாரிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

கோவில்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,

“கருப்புப் பூஞ்சை தடுப்பு மருந்துகள் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மற்ற நாடுகளைவிட இந்தியாவில் தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் போதிய அளவு மருந்துகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒரே நாடு, ஒரு ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வருவதற்கு முன்பாகவே தமிழகத்தில் பொது விநியோக திட்டம் சிறப்பாக இருந்தது. அதனால் தமிழகத்தில் இருந்து பாடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழகத்துக்கு அதிகமாக தடுப்பூசிகள் அனுப்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். தற்போதுதான் அதிகமான மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்வந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தையல் மெஷின் கேட்டேன்.. உயர்கல்வி படிக்க வைக்கிறேன் என்றார் அமைச்சர்” - பழங்குடியின மாணவி நெகிழ்ச்சி!