Tamilnadu

“மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க பிரமுகர் போக்ஸோவில் கைது” : வாணியம்பாடி அருகே கொடூரம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேந்தவர் பாரதி. இவர் பா.ஜ.கவில் நகர பொறுப்பில் உள்ளார். இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் ஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், முதல் மனைவி இறந்ததால், இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்துள்ளன.

இரண்டாவது மனைவி இவரை விட்டுச் சென்றதால், மூன்றாவது திருமணம் செய்துள்ளார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் காரணமாக சென்னையில் இருந்த போது அங்கே ஜீனத் என்ற 2 குழந்தையின் தாயுடன் பழக்கம் ஏற்பட்டு அவர் கணவனை விட்டு, பாரதி உடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாரதியின் 4வது மனையின் 10 வயது பெண் குழந்தையை அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்துவந்ததாக குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக குழந்தையின் தாய் கூறுகையில், “சம்பவம் தெரிந்தபோது இதுகுறித்து எனது கணவரிடன் கேட்டேன். நான் அப்படிதான் செய்வேன். உன்னால் முடிஞ்சத பாரு” என சொல்லிவிட்டார். இதனால் தற்போது வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த புகாரால் அதிர்ச்சியடைந்த போலிஸார், பாரதியை அழைத்து வந்து விசாரித்துள்ளனர். அப்போது, “நான் யாரென்று தெரியாமல், இப்படி விசாரிக்கிறீர்கள்” என மிரட்டும் தொனியில் காவலர்களிடம் பேசியுள்ளார்.

இதனையடுத்து காவலர்கள் குழந்தையின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாரதியின் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மகளுக்கே பா.ஜ.க பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மாணவ, மாணவிகள் புகார்களைத் தெரிவிக்க ஹெல்ப்லைன்” - துரித நடவடிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!