Tamilnadu

“கருப்பு பூஞ்சை தொற்றை கட்டுப்படுத்த தலைசிறந்த வல்லுநர்களுடன் ஆலோசனை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தும் வகையில் நாளை மறுநாள் சென்னையில் தலைசிறந்த மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படவிருக்கிறது என நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் கூடங்குளம், வள்ளியூர், நெல்லை அரசு மருத்துவமனை எதிரே உள்ள கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி முகாம்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார்நாகேந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் காணொலி காட்சி மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கொரோனா தொற்றின் எண்ணிக்கையை குறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தற்போது தென்மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம்,வள்ளியூர் மற்றும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை வந்தால் அந்த நெருக்கடியை குறைக்கும் வகையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 1,600 படுக்கைகள் உள்ள நிலையில் கூடுதலாக 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிப்புப் பணியிலும் 1400 நபர்கள் களப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மாநில அளவில் ஆக்சிஜன் என்பது தட்டுப்பாடில்லாமல் தன்னிறைவாக உள்ளது. கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் 256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாளை மறு நாள் சென்னையில் மிக சிறந்த மருத்துவ வல்லுனர்கள் உடன் தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுபடுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை நடத்த உள்ளோம்.

கருப்பு புஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்து மத்திய அரசிடம் இருந்து 600 வயல் பெறப்பட்டுள்ளது, கூடுதல் மருந்தும் கேட்கப்பட்டுள்ளது. கூடுதலாக மருத்துவர்கள் 2,100 பேரும் 6,000 செவிலியர்களும் , 3700 தொழில்நுட்ப பணியாளர்களையும் விரைவில் நியமிக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Also Read: “தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை”- அமைச்சர் எச்சரிக்கை!