Tamilnadu

“தமிழர்களை இழிவுப்படுத்தும் ‘The Family Man 2’ தொடரை தடை செய்ய வேண்டும்”: அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம்!

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு, அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பப்படவுள்ள The Family Man 2 தொடரை தடை செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு:-

ஈழத் தமிழர்களை தவறாகவும் மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய ‘தி பேமிலிமேன் 2’ என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டு வரவிரும்புகிறேன். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள மேற்கூறிய தொடரின் முன்னோட்டமானது இலங்கையில் ஈழத் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், இழிவு படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

நெடிய ஜனநாயகப் போராட்டக் களத்தில் அவர்களது தியாகங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அது எந்த வகையிலும் தமிழ்ப்பண்பாட்டின் மதிப்புகளைக் கொண்டதாக இல்லை. பெருமைமிகு தமிழ்ப் பண்பாட்டை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளைக் கொண்ட தொடரை எந்த வகையிலும் ஒளிப்பரப்புக்கு ஏற்ற மதிப்புகளைக் கொண்டது என கருத முடியாது. எடுத்துக் காட்டாக தமிழ் பேசும் நடிகையான திருமதி.சமந்தா அவர்களை தீவிரவாதியாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித் தாக்குதல் என்பதோடு, இதுபோன்ற உள்நோக்கமும் விஷமத்தனமுமான பரப்புரையையாராலும் சகித்துக் கொள்ள முடியாது. இந்தத் தொடரின் முன்னோட்டம் ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.

இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்திற்காக பல ஆண்டுகளாக நமது உடன்பிறப்புகளான ஈழத் தமிழர்கள் போராடி வருகையில், அமேசான் பிரைம் போன்ற நிறுவனம் இதுபோன்றதொரு பரப்புரையை மேற்கொள்வது அவசியமற்றதாகும். மேற்கூறிய தொடரானது, ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது தமிழகத் தமிழர்களின் உணர்வுகளையும் பெருமளவில் புண்படுத்தியுள்ளது.

இத்தொடர் ஒளி பரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தைப் பேணுவதுகடினமாகும். இந்தச் சூழ்நிலையில், அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ஒளி பரப்பப்படவுள்ள இந்தத் தொடரை நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தங்களைக் கேட்டுக் கொள் கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “PSBB பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” : மத்திய கல்வி அமைச்சருக்கு தயாநிதி மாறன் MP கடிதம்!