Tamilnadu

“மொழிப்பற்று, நாட்டுப்பற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர் சி.பா.ஆதித்தனார்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

தமிழ் மொழிப் பற்று, நாட்டுப் பற்று ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த டாக்டர். சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளான இன்று தமிழகத்திற்கும், தமிழ்மொழிக்கும் அவர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டி, மரியாதை செலுத்துகிறேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்த முதல் திராவிட முன்னேற்றக் கழக அரசில் தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும்; முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றி - தமிழ் மொழிப் பற்று, நாட்டுப் பற்று ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த டாக்டர். சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளான இன்று (24.5.2021) - தமிழகத்திற்கும், தமிழ்மொழிக்கும் அவர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டி, மரியாதை செலுத்துகிறேன்.

கடைக்கோடி வாசகருக்கும் எளிமையாகப் புரியும் மொழியில் - இப்போது அதிகாலையில் ஒவ்வொரு வாசகர்களின் கைகளிலும் தவழ்ந்து கொண்டிருக்கும் 'தினத் தந்தி நாளிதழைத் தோற்றுவித்தவர் சி.பா.ஆதித்தனார் அவர்கள்.

பேரவைத் தலைவராக சட்டமன்ற ஜனநாயகத்திற்கும், அமைச்சராக தமிழக மக்களுக்கும் அவர் ஆற்றிய சீர்மிகு பணிகளைப் போற்றிப் பாராட்டி - நினைவுகூரும் வகையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகிய அமைச்சர் பெருமக்களை - தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு - மரியாதை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 7 பேர் விடுதலை.. குடியரசுத் தலைவர் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் - முரசொலி!