Tamilnadu

தொகுதி நிதியில் இருந்து 20 ஆயிரம் மருந்து பெட்டகங்கள் வழங்கிய மதுரை MP : அமைச்சர்கள், MLAக்கள் பங்கேற்பு!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம் பி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்வு மதுரை மாநகராட்சியின் சார்பில் மடீசியா அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகங்கள் மாநகராட்சிப் பகுதிக்கு 15000மும், ஊரக பகுதிக்கு 5000மும் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மருந்து பெட்டகங்களை பயனாளிகளுக்கு கொடுத்து துவக்கிவைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், கோ.தளபதி, பூமிநாதன், டி.வெங்கடேசன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிப்பில், “மதுரை மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பெற்று கடந்த 5 நாட்களில் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் மற்றும் மாநகராட்சியின் முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நகர்நல பணியாளர்களுக்கும் இந்த் மருந்து பெட்டகங்கள் வழங்கப்படவுள்ளது.

இதில் கடந்த 5 நாட்களில் வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு மண்டல மருத்துவ அலுவலர்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மூலமாக நகர்புற சுகாதார செவிலியர்களைக் கொண்டு அவரவர் வீட்டிலேயே நேரடியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது.

மேலும், நாளை முதல் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு வகைப்படுத்துதல் மையத்திற்கு வந்து மருத்துவர் அறிவுறுத்தலின்படி வீட்டில் தனிமைப் பெறுபவர்களுக்கு வகைப்படுத்துதல் மையத்திலேயே மருந்து பெட்டகம் வழங்கப்படும். நோய்தொற்று கண்டறியப்பட்டு ஓரிரு நாளில் மருந்து பெட்டகம் கிடைக்கப்பெறவில்லையெனில் 7305024653, 7305024658 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் முன்களப் பணியாளர்களுக்கும், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நகர்நலப் பணியாளர்களுக்கும் மண்டல சுகாதார அலுவலர்கள் மூலமாக மருந்து பெட்டகம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனா 2வது அலையில் மட்டும் 420 மருத்துவர்கள் பலி.. ‘IMA’ வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!